சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு, ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக உணர்வுள்ள சிறந்த மனிதர் என கூறியுள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விமர்சன ரீதியாக அனைவராலும் பாராட்டப்பட்ட தமிழ் நடிகர் விவேக்கின் அகால மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவர் ஒரு பன்முக நடிகர் மட்டுமல்ல சமூக உணர்வுள்ள சிறந்த மனிதராகவும் இருந்தார். அதற்காகவே நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்தார். இந்த கடினமான நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.