புதுக்கோட்டை: நடிகர் விவேக்குக்கு நேர்ந்ததை கொரோனா தடுப்பூசியோடு இணைக்க வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அளித்த பேட்டி: நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்தது குறித்து அரசு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா என்ற கேள்வியையே தவிர்ப்பது நல்லது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய நேரம் இது, உலகளாவிய அளவில் கொரோனா வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கை என்பது தான் அவசியம்.