சென்னை: சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த டாஸ்மாக் கடை மீது பெண்கள் கல்லெறிந்து தாக்கியுள்ளனர். இதுபற்றி கடையின் விற்பனையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் என்பவர் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அந்த பகுதியில் டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு அதே பகுதியை சேர்ந்த 10 பெண்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இந்த பெண்கள் தங்கள் குடிகார கணவர்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் கோரியபடி கடையை ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தயாராக இல்லாததால் கடை மீது கற்களை வீசியுள்ளனர்.