தேசிய அளவில் லாக்டவுன் அமல்படுத்த தேவையில்லை; கொரோனாவின் உக்கிரம் ஜூனில் அதிகமாகும்! தினசரி பலி 2,320 வரை உயரும் என ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கொரோனாவின் உக்கிரம் வரும் ஜூனில் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், அப்போது தினசரி பலி 2,320 வரை உயரும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும்நிலையில், தினசரி இறப்பு 1350க்கும் ேமற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ‘லான்செட்’ கோவிட் 19 ஆணைய உறுப்பினர்கள் ‘இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலையை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கொரோனாவால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஜூன் மாதம் முதல் வாரத்தில் சராசரியாக 2320 ஆக இருக்கும்.

நோய் பரவல் வேகமாக இருந்தாலும், புவியியல் வரையறைகளை பார்த்தால் இரண்டாம் அலையானது, முதல் அலையுடன் கிட்டதட்ட ஒத்துப் போவதாக உள்ளது. இருப்பினும் நகரங்களிலேயே நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. முதல் 50 சதவீதம் அடங்கிய மாவட்டங்களின் எண்ணிக்கை, முதல் அலையின் போது 40 ஆக இருந்தது. ஆனால், தற்போது 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 75 சதவீதம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 60 முதல் 100 ஆக இருந்தது. ஆனால் முதல் அலையில் இருந்து இரண்டாவது அலை 2 வழிகளில் வேறுபட்டது. முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 40 நாட்களுக்கும் குறைவான காலத்தில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000 என்பதிலிருந்து 80,000 ஆக உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த அளவை எட்ட 83 நாட்கள் ஆனது. இரண்டாவது வேறுபாடு என்னவென்றால், தற்போது அறிகுறி இல்லாமல் அல்லது பாதி அளவு அறிகுறி உள்ளவர்களுக்கு தொற்று அதிகம் ஏற்படுகிறது. இறப்பு விகிதமானது மார்ச் 2020ல் 1.3 சதவீதமாக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விகிதமும் 2021 துவக்கம் வரை 0.87 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏப்ரல் மாத துவக்கத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை 664 ஆனது.

இது ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2,320 என்ற அளவை எட்டும். 2021ல் சோதனைக்காக 1.7 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 7.8 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டி இருக்கும். ஏப்ரல் 11ம் தேதி கணக்கீட்டின்படி 45 வயதிற்கு மேற்பட்ட 29.6 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முக்கியத்துவ அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலும், பாதிக்கும் மேல் பற்றாக்குறை ஏற்படும்.

தேசிய அளவில் லாக்டவுனை அமல்படுத்த தேவையில்லை. மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை 7 நாட்கள் தனிமைபடுத்த வேண்டும். 8வது நாள் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும். 10 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அடுத்த 2 மாதங்களுக்கு தடை விதிப்பதால் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: