ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

ஆரணி: ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு அரசு நிர்ணயித்த விலை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மில்லர்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆரணி, மேற்கு ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், அரையாளம், வடுக்கசாத்து, இரும்பேடு, எஸ்.வி.நகரம், சேவூர், காமக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் 200 விவசாயிகள், தங்களது நெல் மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக, விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் விற்பனை கூடத்தில்  எடை போடாமல் இருந்த நிலையில், நேற்று 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் எடை போடப்பட்டது. அப்போது, கடந்த வாரத்தில்  நெல் மூட்டைகளுக்கு வழங்கிய விலையைவிட ₹300 குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளனர்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆரணி- வந்தவாசி, சேத்துப்பட்டு செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசார், ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம், நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஏஜெண்டுகளிடம் பேசி, நெல் மூட்டைகளுக்கு அரசு நிர்ணயித்த விலை வழங்குமாறு தெரிவித்தனர்.

பின்னர், கண்காணிப்பாளர் மணிகண்டன், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், விற்பனை கூடத்தில் ஏற்கனவே எடை போடப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் யாரும் எடுக்கக்கூடாது, விலை உயர்த்தி வழங்கும் வரை நெல் மூட்டைகளை எடுக்கவிடமாட்டோம் என கூறி ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், நாளை (இன்று) சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி, நெல்லுக்குரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.  விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: