ஈரோட்டில் 2வது நாளாக கனமழை 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

ஈரோடு: 2வது நாளான நேற்று இரவு பெய்த கனமழையால் ஈரோட்டில் 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பலத்த மழை பெய்த நிலையில், 2வது நாளாக நேற்று நேற்றிரவு  மாவட்டத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஸ்டோனிபிரிஜ் பாலம், மரப்பாலம் உள்ளிட்ட  பகுதிகளில் கரையோரங்களில் இருந்த 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கனி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

மழைஅளவு விபரம் (மி.மீட்டரில்):

ஈரோடு 30, பெருந்துறை 49, கோபி, கொடுமுடி தலா 4, சத்தி, கொடிவேரி தலா 7, கவுந்தப்பாடி 5, நம்பியூர் 12, சென்னிமலை 20, மொடக்குறிச்சி 32, குண்டேரிப்பள்ளம் 41, வரட்டுப்பள்ளம் 14.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டம்  முழுவதும் சராசரி மழையளவு 13.7 மில்லி மீட்டர் ஆகும்.

Related Stories: