சென்னை: மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திடீர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைசுவை நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்படுத்தும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக்கின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பிரபல நடிகர் என்பதுடன் மரம் நடுதல், கொரோனா தடுப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் மிக ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர் விவேக். உடல்நிலை பாதிப்பில் இருந்து நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் மற்றும் கலைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி. தினகரன்:
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என டிடிவி தினகரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார்.
புதுவை ஆளுநர் தமிழிசை:
நடிகர் விவேக் நலம் பெற தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் சகோதரர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என கூறினார்.
நடிகர் விஜயகாந்த்:
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தீவிர சிகிச்சையில் உள்ள செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். நடிகர் விவேக் பூரண நலம் பெற்று திரைத்துறையில் தொடர்ந்து பயணித்திட வேண்டும் எனவும் கூறினார்.
கவிஞர் வைரமுத்து:
நடிகர் விவேக் நலம் பெற வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும் என கூறினார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம்:
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.