சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச்சுவர், நேற்று இரவு பெய்த ஒருநாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இந்த சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு 6 மாதங்கள்தான் ஆகிறது. இந்த கட்டுமானங்கள் இடிந்து விழுந்த பிறகு குத்தகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தண்டிக்கப்பட்ட அதிகாரிகள் எத்தனைபேர்? அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில், அழகுபடுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் சுரண்டல்தான் என்பதன் சாட்சியே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனதுதான் என்றாலும், குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்க இந்த முன்னெச்சரிக்கை உதவும்.