மாண்டி கார்லோ: கொரோனா பீதி காரணமாக ரசிகர்கள் இல்லாத பூட்டிய அரங்கில் விளையாடுவது வீரர்களின் ஆற்றலை குறைத்து விடுகிறது’ என்று முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்கள் நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலின் 2வது அலை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல், பூட்டிய அரங்கில் நடக்கின்றன. மொனாகோ நாட்டின் மாண்டி கார்லோ நகரில் நடக்கும் ஆடவர்களுக்கான ரோலக்ஸ் மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியும் பூட்டிய அரங்கில் நடக்கின்றது. இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச்(செர்பியா, 1வது ரேங்க்)), ரஃபேல் நடால்(ஸ்பெயின், 3வது ரேங்க்), ஸ்டெபினோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ், 5வது ரேங்க்), அலெக்சாண்டர் ஜவரெவ்(ெஜர்மனி, 6வது ரேங்க்), அலெக்சாண்டர் ருபலேவ்(ரஷ்யா, 8வது ரேங்க்), டீகோ ஸ்வார்ட்ஸ்மன்(அர்ஜென்டீனா, 9வது ரேங்க்), மட்டியோ பெர்ரெட்டினி(இத்தாலி, 10வது ரேங்க்), ராபர்டோ பாடிஸ்டா அகத்(ஸ்பெயின், 11ரேங்க்) உட்பட 63 பேர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 ஜோடிகள் உட்பட 56 வீரர்கள் விளையாடுகின்றனர். ஒற்றையர், இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிகள் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளன. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜோகோவிச் இத்தாலியின் ஜானிக் சின்னரை(22வது ரேங்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழத்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 34நிமிடங்கள் நடந்தது. மற்றொரு போட்டியில் ரஃபேல் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அர்ஜென்டீனாவின் ஃபெட்ரிகோ டெல்போனிசை(87வது ரேங்க்)) வீழத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 20 நிமிடங்களில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என நேர் செட்களில் சிலி வீரர் கிறிஸ்டியன் கெரினை(24வது ரேங்க்) வீழ்த்தி முதல் வீரராக கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்தப்போட்டி ஒரு மணி 40 நிமிடங்கள் நீடித்தது. போட்டிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், நடால் இருவரும், ‘ரசிகர்கள் இல்லாத அரங்கில் விளையாடுவதால் ஆட்டத்தின் தீவிரத்தை தொடர முடியவில்லை. வெற்று அரங்கில் விளையாடுவது வீரர்களின் ஆற்றலை குறைத்து விடுகிறது’ என்று கூறியுள்ளனர்.