சேலம் அருகே பயங்கரம்: ரூ.8 கோடி ராட்சத கிரேன் தீப்பிடித்து எரிந்து நாசம்..! சாலையில் குதித்த கிளீனர் பலி

அயோத்தியாப்பட்டணம்: சேலம் அருகே நள்ளிரவில் ரூ.8 கோடி மதிப்பிலான ராட்சத கிரேன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீயில் இருந்து தப்பிக்க, வாகனத்தில் இருந்து கீழே குதித்த கிளீனர் தலையில் அடிபட்டு பலியானார். இந்த கோர விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ். இவர் நாகலாந்து மாநிலத்தில் இருந்து, தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணிகள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் 14 சக்கரங்கள் கொண்ட ரூ.8 கோடி மதிப்புள்ள  ராட்சத கிரேன் வாகனத்தை வாங்கி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வரகிறார். நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் இயங்கும் தனியார்  சிமெண்ட் தொழிற்சாலைக்கு பணிகளை மேற்கொள்ள அந்த கிரேன் வந்திருந்தது.

பணிகளை முடித்த பின்னர், ராட்சத கிரேன் இயந்திரம், நேற்று முன்தினம் நள்ளிரவு  வாழப்பாடியில் இருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. கும்பகோணம் அடுத்த பாபநாசம் பகுதியை சேர்ந்த டிரைவர் பத்ரிநாத்(40) கிரேனை ஓட்டி வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த கிளீனர் ஹேமந்த்(24) வாகனத்தின் உள்ளேயும், மற்றொரு கிளீனரான தெற்கு டெல்லியை சேர்ந்த சமீம் அகமத்(32) கிரேனின் மேற்பகுதியிலும் அமர்ந்து சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில், அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரம் அருகே சென்றபோது, திடீரென ராட்சத கிரேன் தீப்பற்றிக் கொண்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சமீம் அகமது, வாகனத்தின் மேலிருந்து சாலையில் குதித்துள்ளார். அப்போது தலையில் அடிபட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டதும் டிரைவர் பத்ரிநாத், மற்றொரு கிளீனர் ஹேமந்த் ஆகிய இருவரும், வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு இறங்கி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்க போராடினர்.

ஆனால், கிரேன் கொளுந்து விட்டு எரிந்ததால், அம்மாப்பேட்டையில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காரிப்பட்டி இன்ஸ்பெக்டர்  கோபாலகிருஷ்ணன், எஸ்ஐ மோகன் தலைமையிலான போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள ராட்சத கிரேன் இயந்திரம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்தின் போது, ராட்சத கிரேன் இயங்குவதற்காக வாகனத்தில் இருந்த  300 லிட்டர் ஆயில் நிரம்பிய டேங்க், அதிர்ஷ்டவசமாக தீப்பற்றி வெடிக்கவில்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: