பட்டப்பகலில் பயங்கரம் திமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை: ராஜபாளையத்தில் பரபரப்பு

ராஜபாளையம்:  ராஜபாளையத்தில் பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் திமுக 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி, அண்ணாமலை ஈஸ்வரன் சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்கு டூவீலரில் சாமி கும்பிட சென்றார். அப்போது வழிமறித்த மர்மக்கும்பல் அண்ணாமலை ஈஸ்வரனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

தகவலறிந்ததும் ராஜபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பகுதியில் நடந்த கபடி விளையாட்டில் ஏற்பட்ட  மோதலில் வாலிபர் ஒருவர் கொலையான வழக்கில் அண்ணாமலை ஈஸ்வரன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அண்ணாமலை ஈஸ்வரன் ஜாமீனில்  வெளியே வந்தார். இதனால் இக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: