தேன்கனிக்கோட்டை அருகே பயங்கரம் கர்ப்பிணி மகள் சுட்டுக்கொலை போதையில் தந்தை வெறிச்செயல்: தாயை காப்பாற்ற முயன்றபோது குண்டு பாய்ந்தது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, தாயை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி மகள் குண்டு பாய்ந்து பலியானார். போதையில் தந்தை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சூளகுண்டா அருகேயுள்ள வரதேகவுண்டன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அருணாசலம்(60). இவரது மனைவி மாதேவி(54). இவர்களது மகள் வெங்கடலட்சுமி(21). இவருக்கு 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த வெங்கடலட்சுமி, தெலுங்கு வருட பிறப்பையொட்டி, தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அருணாசலம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை 4 மணியளவில், மனைவி மாதேவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அருணாசலம், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து, மனைவியை சுட முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடலட்சுமி, தாயை காப்பாற்றுவதற்காக தந்தையை தடுக்க முயன்றார். ஆனாலும் ஆத்திரம் தீராத அருணாசலம் துப்பாக்கியால் சுட்டதில், வெங்கடலட்சுமி மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அலறியபடி அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக வெங்கடலட்சுமியை மீட்டு, அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தளி போலீசார், வெங்கடலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள அருணாசலத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: