நல்ல நாளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் மூடநம்பிக்கை வளர்ப்பதா இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: நல்ல நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்ற உத்தரவு மூட நம்பிக்கையை வளர்ப்பது போன்றதாகும் என்பதால் அந்த உத்தரவை அரசு திரும்ப பெற முத்தசரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்களிலும், குறிப்பாக சித்திரை 1, ஆடி 18, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும், இந்நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணத்திற்கு கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்கள் ‘நல்ல நாட்கள்’ என்பது ‘நம்பிக்கையே’ தவிர இதற்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதுமில்லை. மற்ற நாட்கள் கெட்ட நாட்களும் அல்ல. பகுத்தறிவுக்கு ஆதரவாக தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பெரியார் வழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அதிமுக முற்றிலும் காவி மயத்தில் கலந்து போனதற்கு அரசின் உத்தரவு ஆவண சாட்சியாகும். மக்களிடம் மூடநம்பிக்கையை மேலும் ஊக்கமூட்டி வளர்க்கும் செயலில் அரசு நிர்வாகம் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் விடுமுறை நாட்களில் கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலித்து, அலுவலகம் செயல்பட வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: