கெங்கவல்லி: ஆத்தூர் அருகே அதிமுக நிர்வாகியின் தோட்டத்தில், மர்மநபர்கள் 7 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்திச்சென்றனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரவி(48). இவர் தனது உறவுக்காரரான ஜெயலட்சுமிக்கு சொந்தமான விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரிப்பு செய்து வருகிறார். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 80 சந்தன மரங்கள் நட்டு வளர்த்து வருகிறார். அதில் 4 சந்தன மரங்கள் வீணானது. 76 சந்தன மரங்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவரது தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், 20 அடி உயரம் வளர்ந்துள்ள 8 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர். அதில் ஒரு மரத்தை அங்கேயே விட்டுவிட்டு, 7 மரங்களை கடத்திச் சென்றுவிட்டனர்.