×

ரத்தம் உறைவு, தட்டணு எண்ணிக்கை குறைவு சர்ச்சை: ஜான்சன் தடுப்பூசிக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டால் ரத்தம் உறையும் ஆபத்து இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 13 கோடியே 67 லட்சத்து 46,261 பேர் கொரோனா வைரசினால் பாதித்துள்ளனர். 29 லட்சத்து 48 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில், தொற்றினால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, இங்கு 3 கோடியே 12 லட்சத்து 68,952 பேர் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 5 லட்சத்து 62 ஆயிரத்து 608 பேர் பலியாகினர். இந்நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சில நாட்களுக்கு பிறகு, 6 பெண்களுக்கு ரத்த உறைவு, ரத்த தட்டணுக்கள் (பிளேட்லெட்) அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. அமெரிக்காவில் இதுவரை 68 லட்சம் டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவில் இந்த தடுப்பூசி பயன்படுத்துவதை, அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க வினியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : US ,Johnson , Blood clots, platelet count controversy: US bans Johnson vaccine
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...