×

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

திருவள்ளூர்: இளம்பெண்ணை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வாணி (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி. தினமும் கல்லூரிக்கு ரயிலில் செல்வது வழக்கம். அப்போது, வேப்பம்பட்டு ரயில் நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 2019ம் ஆண்டு விக்னேஷ்வரன், சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்றார்.

அப்போது அவர், வாணி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாணி கர்ப்பமானார். இதுபற்றி விக்னேஷ்வரனிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர், வாணியை வேப்பம்பட்டில் உள்ள ஒரு கடைக்கு வரவைத்து குளிர்பானம் வாங்கி கொடுத்து, நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி உறுதியளித்து வீட்டுக்கு அனுப்பினார். 2 நாட்கள் கழித்து, தனக்க்கு கரு கலைந்து விட்டதாக தொலைபேசியில் வாணி தெரிவித்தார். அதற்கு, நான் தான் கருக்களைப்பு மாத்திரை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தேன் என விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பின்னர், திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மீண்டும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்தவேளையில், விக்னேஷ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்துள்ளது.

இதையறிந்த வாணி, விக்னேஷ்வரனிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில், நீ என்னுடன் இருந்த படங்களை பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வாணி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Teenager threatens to kill a teenager by saying he wants to get married: Young man arrested
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்