சாத்தூர்: சாத்தூர் அருகே, கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெரிய ஒடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் (எ) சுரேஷ் (35). விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி (32). பைனான்சில் டிராக்டர் வாங்கிய சுரேஷ், மேலும் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இதில் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, நேற்று சுரேஷ் ஆட்டுப்பண்ணையில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதை கண்ட ஜெயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.