கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தை மொத்த வியாபாரம் அடியோடு பாதிப்பு

ஈரோடு: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைக்கு மொத்த வியாபாரிகள் வருகை அடியோடு குறைந்ததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. நிரந்தர ஜவுளிக்கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஜவுளி சந்தை செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறும். வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கா்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு ஜவுளி சந்தையில் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது; வழக்கமாக ஜவுளி சந்தையானது திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை பகலில் முடிவடையும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரவு சந்தை நடைபெற மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் வேறுவழியின்றி பகலில் தான் கடைகள் திறக்க வேண்டிய நிலை உள்ளது. கொரோனா பீதி காரணமாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது.

சில்லரை வர்த்தகம் மட்டும் குறைந்த அளவில் நடந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் காலத்தில் பறக்கும்படை அதிகாரிகளின் கெடுபிடிகளால் ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து நிலைமை சரியாகும் என்றிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் வியாபாரத்தை முற்றிலும் முடக்கிவிட்டது. ஜவுளிகள் நுகர்வை பொருத்து தான் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும். தற்போது ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி டையிங், பிளீச்சிங், பவர்லூம் என உற்பத்தி சார்ந்த தொழில்கள் ஒவ்வொன்றாக பாதிப்படையும். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

Related Stories: