திமுக 200 தொகுதியில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி: தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவது உறுதி என்று தவாக தலைவர் வேல்முருகன் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிவாய்ப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

பின்னர், வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எனது பண்ருட்டி தொகுதி உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், தமிழக அளவில் திமுக தலைமையிலான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பேசினேன். அந்தவகையில், திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி.

தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்த எடப்பாடியின் அரசு அகற்றப்படும். மதவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடம் இருக்காது. நீட் உள்ளிட்ட தமிழக மாணவர்களின் உரிமையை பறிக்கக்கூடிய விஷயங்களுக்கு இங்கே இடம் இருக்காது. தமிழக மக்கள் எதிர்த்த திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.தமிழகம் முன்னேற மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். அப்போது தான் ஏழை, எளிய மக்களின் வாழ்வு நிம்மதி அடையும். அரக்கோணத்தில் நடந்தது மாபெரும் படுகொலை. இதில் அதிமுக ஒன்றிய செயலாளரின் மகன்கள் தான் முக்கிய குற்றவாளிகளாக உள்ளார்கள். அதிமுக தான் இந்த படுகொலை செய்திருக்கிறது. இவர்களுக்கு துணை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு கூறினார்.

Related Stories: