திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தூண்டிகை விநாயகர் கோயிலை சுற்றிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தூண்டிகை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போடுவது வழக்கம்.
அதன்பிறகு அங்கிருந்து சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூண்டிகை விநாயகர் கோயில் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் தூண்டிகை விநாயகர் கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. தூண்டிகை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போட வரும் பக்தர்கள், கழிவுநீரை மிதித்தவாறு நடந்து சென்று சாமி தரிசனம் செய்து தேங்காய் விடலை போடுகின்றனர்.