பெண்மை எழுதும் கண்மை நிறமே

நன்றி குங்குமம் தோழி

கருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.

கூந்தலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவுகள் ரொம்பவே அதிகம். அவசர யுகத்தில் விற்பனையில் இருக்கும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை. அதிகமான ரசாயன கலப்பால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.

இவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும்  பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்கிற கேள்விகளோடு சித்த மருத்துவரான நந்தினி சுப்ரமணியத்தை அணுகியபோது…

‘‘நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். எந்தவித பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியம் சார்ந்த, பாதுகாப்பான எளிய வழி இது.

அதேபோல் தேயிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் சற்று ஊறவைத்து அரைமணிநேரத்திற்குப் பின் எலுமிச்சை சாற்றை இணைத்து, அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் நரை முடி ஒருவிதமான ப்ரவுன் நிறத்திற்கு மாறி இருக்கும்.

அதேபோல், கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.

தலைமுடிகளின் வேர்கால்களுக்கு இடையில் ஏதேனும் நோய்தொற்று (infection) இருப்பின் தேங்காய் எண்ணையில் எலுமிச்சை சாறு கலந்து பஞ்சில் நனைந்து வேர்கால்களின் இடையில் தடவினால், பித்தத்தைக் குறைத்து பாதிப்பில் இருந்து காத்து முடி வளர்ச்சியினை தூண்டும்.மேற்குறிப்பிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.

ஏதாவது ஒரு மூலிகை யாராவது ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவேமுடியில் தடவுவதற்கு முன், சிலமணித் துளிகள் உடலில் லேசாகத் தடவிப் பார்த்து அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்த பிறகு பயன்படுத்தினால் மிகவும் நல்லது.வயது மூப்பின் காரணமாக உடலில் தோன்றும் சின்னச் சின்ன மாற்றங்களை மகிழ்ச்சியாய் வரவேற்போம். முதுமையைப் போற்றுவோம்.’’

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: