கோவை: கோவை: கோவையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.ஐ. தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் சிலர் சிலர் இரவு 10 மணிக்கு மேல் உணவு அருந்த சென்றனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் உணவகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி ஆய்வாளரின் தாக்குதலால் அங்கிருந்த பெண்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளரின் இந்த அடாவடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டை அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்தது போதாது என கூறியுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அத்துமீறி நடந்துகொண்ட உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தடியடி தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு விசாரணைக்கு எடுத்தது. தாக்குதல் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.