அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: 3 நாட்கள் அலுவலகம் மூடல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 50 வயது ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அலுவலகம் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணி முடித்து திரும்பிய 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவிநாசியை அடுத்த கருவலூரை சேர்ந்த 50 வயது ஆண் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கிளை சிறை ஆகியவை வழக்கம் போல செயல்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிப்பு, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் உட்பட கேரளா செல்லும அனைத்து ரயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

கடலூர் வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொதுமக்களும், வியாபாரிகளும் வழக்கம் போல செயல்பட்டதால் கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதிகளை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் செயல்படுவதால் கடலூர் மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Related Stories: