×

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக சென்னை முழுவதும் 2,351 பேரிடம் ரூ.4.44 லட்சம் அபராதம் வசூல்: மாநகர காவல் துறை நடவடிக்கை..!

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த 4 நாட்களில் 2,351 பேர்  மீது வழக்கு பதிவு செய்து மாநகர போலீசார் ரூ.4,44,600 அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழகம் அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், கூட்டமாக செல்ல கூடாது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருக்கும் நபர்களிடமும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் நிலையங்கள் என 196 காவல் நிலையங்களில் கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக  ரூ.4,44,600 பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் ெசன்னை முழுவதும் அதிகபட்சமாக 892 வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.1,62,600 வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகரம் முழுவதும் போலீசார் தீவிரமாக முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிவரும் நபர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல், சமூக இடைவெளி இன்றி கூட்டமாக இருந்ததாக சென்னையில் கடந்த 4 நாட்களில் 119 வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.59,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Metropolitan Police , 4.35 lakh fines levied on 2,351 persons across Chennai for driving without wearing a helmet: Metropolitan Police action
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...