தாயால் கைவிடப்பட்ட புலி குட்டியை பெரியாறு சரணாலயத்தில் விட முடிவு..!

கூடலூர்: கேரளாவின் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 925 கிமீ பரப்பளவில் உள்ளது பெரியாறு புலிகள் சரணாலயம். இங்கு, சரித்திர புகழ்பெற்ற கண்ணகி கோயிலும், முல்லை பெரியாறு அணையும் உள்ளது. கடந்தாண்டு நவ.21ம் தேதி பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ள மங்களதேவி வனப்பகுதியில் தேக்கடி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, தாயால் கைவிடப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சுமார் 60 நாள் வயதுடைய பெண் புலிக்குட்டி ஒன்றை கண்டனர். அதை மீட்டு, தேக்கடி வனவிலங்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

தாய் புலியை கண்டுபிடிப்பதற்காக பெரியாறு புலிகள் சரணாலயம் மற்றும் அதையொட்டிய எல்லையான மேகமலை வனவிலங்கு சரணாலய பகுதியிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதனால் புலி குட்டியை, மனிதர்கள் தொடர்பு இல்லாத வனப்பகுதியில் வனத்துறையினர் பராமரித்து வந்தனர். மங்களதேவி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த புலிக்குட்டிக்கு ‘மங்கலா’ என பெயரிட்டனர். கடந்த ஜனவரி முதல் கண்ணகி கோயில் அருகே உள்ள கரடிக்கவலை வனப்பகுதியில் இந்த புலிக்குட்டிக்கு, சுயமாக வேட்டையாட கேரள வனத்துறை பயிற்சியளித்தது. தற்போது ‘மங்கலா’ என்ற புனைப்பெயர் கொண்ட புலி குட்டி காட்டுக்குள் தனியாக நுழைய தயாராகி வருகிறது.

Related Stories: