புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி திருவிழா புதுச்சேரியில் நேற்று தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். மக்கள் கட்டுப்பாடோடு இருந்தால் கொரோனா கட்டுக்குள் வரும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.