டெல்லி: பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையை இன்று காணொலியில் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் தினசரி பாதிப்பு என்பது வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ஒருநாள் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணை என்பது பெரும்பாலாக காணொலி காட்சி வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒருசில நாட்கள் மட்டும் நேரடி விசாரணை நடைபெறுகிறது. குறிப்பாக ஒரு வகுப்பை சார்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஊழியருக்கு மட்டுமே உச்சநீதிமன்றத்தில் அனுமதி என்பது வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது இன்று காலையில் காணொலி காட்சி வாயிலாக உச்சநீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கிறது. காலை 10.30 மணிக்கு விசாரிக்க வேண்டிய அமர்வு 11.30க்கும் 11 மணி அமர்வு 12 மணிக்கும் காணொலியில் விசாரணை நடத்தவிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தலைநகர் டெல்லியை பொறுத்தவரை கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. மெட்ரோவில் 50 சதவீத பயணிகளுடன் அனுமதி, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தலைநகரில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.