புழல்: வியாசர்பாடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், வில்லிவாக்கம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா (34) டெலிவரி ஊழியராக வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக, தனது பைக்கில் மூலக்கடை பகுதிக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள், கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்து 300 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த அவர், ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாதவரம் போலீசார் விரைந்து வந்து, அந்த 2 பேரையும் விரட்டி பிடித்தனர். விசாரணையில், வியாசர்பாடி மேல பொன்னப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரதன் (26), வியாசர்பாடி பெரியார் நகர் உதயசூரியன் தெருவை சேர்ந்த பெயின்டர் ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, ஒரு கத்தி, 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.