×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்எல்ஏ ஆவேசம் அரசியல் சூனியக்காரர் அமைச்சர் சம்பத்

கடலூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான அதிமுக விசுவாசிகளை  இழந்து கொண்டே போனால் கட்சியின் நிலை?. தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை. இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.

இந்நிலையில் எங்கள் மீது அபாண்டமான பொய்யான குற்றசாட்டை சுமத்தி நால்வரை நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத் சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும். உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள்.

இதற்கு காலம்தான் பதில் சொல்லும். இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். உண்மையாகவே கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. விசுவாசமான, உண்மையான, தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

* மாஜி எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்
விழுப்புரம் தொகுதியில் கடந்த 1984 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மணி என்கிற ராஜரத்தினம். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக தேர்தலின்போது மூத்த நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை. இந்த அலட்சியப்போக்கு நீடிப்பதால் அதிமுகவிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன். இதே போல் கட்சி தலைமை மீது மூத்த நிர்வாகிகள் பலரும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : minister ,Samad ,MLA , Female MLA fired from AIADMK AIADMK political witch minister Sampath
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...