டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என டெல்லி முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைநகர் டெல்லியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலை தடுக்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், பம்பர் சலுகையை அறிவித்துள்ளார். அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களின் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; டெல்லியில், நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. கொரோனா கட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மூன்றாம் கட்ட பரவலால் டெல்லி மோசமான நிலைமையை சந்தித்துள்ளது. தற்போது, மூன்றாம் கட்டத்தைவிட, நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. புதிதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த அரசு தயாராக உள்ளது. டெல்லியில் 65 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான். நாம் தடுப்பூசி செலுத்தும் வேகத்தைவிட, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. நாம் விரைந்து செயல்பட்டு கொரோனா வைரஸைவிட, வேகமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஊரடங்கில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறிய கெஜ்ரிவால், படுக்கைகள் பற்றாக்குறையால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.