மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாளேரி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஒரு ராட்டின கிணறு கட்டப்பட்டது. அந்த நீரை மக்கள் குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த ராட்டின கிணறு முறையான பராமரிப்பின்றி பாழடைந்து, தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, மிக விரைவில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.