ஆம்பூர் அருகே குப்பைக்கு வைத்த தீயால் எரிந்த கார்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே குப்பைக்கு வைத்த தீயால் அருகில் இருந்த கார் எரிந்து கருகியது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் கடை ஆம்பூர் சாணாங்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ளது. இவரது கடைக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேரணாம்பட்டை சேர்ந்த ஒரு நபர் பழுதடைந்த காரை விட்டு சென்றார். பின்னர், அந்த நபர் வராததையடுத்து இந்த காரை அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கோவிந்தசாமி நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் அங்கிருந்த விஷமிகள் சிலர் குப்பைக்கு தீ வைத்துள்ளனர். இதில், தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்த காரில் தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதை கண்ட அப்பகுதிமக்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து அப்பகுதிமக்கள் ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ அருகில் பரவாததால் அங்கு இருந்த வாகனங்கள் சேதமின்றி தப்பியது. இதுகுறித்து ஆம்பூர் டவுன்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: