தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.2639.15 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைப்பு: ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியில் மும்முரம்

தஞ்சை: கடைமடைப் பகுதியின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் கல்லணை கால்வாய் புனரமைப்பு திட்ட பணிகள் ரூ.2639.15 கோடியில் துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் என்ற பெயரில், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1928-ம் ஆண்டு, வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட பூதலுார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியின் மூலம் பாசன வசதியை உருவாக்க, 148 கி.மீ. துாரத்துக்கு முதன்மை வழி தடத்தையும், 636 கி.மீ.துாரத்துக்கு கிளை வாய்க்கால்களையும் வெட்டினர். அத்துடன் 694 நீர்பிடிப்பு ஏரிகள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்காக ஆரம்பத்தில், வினாடிக்கு 4,200 கன.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கரைகள் பலவீனமானதால் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே கரைகளில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாகி விடுகிறது. இதனால் கடைமடைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் பல ஆண்டுகளாக கல்லணை கால்வாயை முறையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், கல்லணை கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய, ரூ.2639.15 கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பணியை கடந்த பிப்.14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து பணிகள் துவங்கப்பட்ட கல்லணை கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பது, கரையை பலப்படுத்தல் போன்ற பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறியதாவது: 16 தொகுப்புகளாக பணிகள் பிரிக்கப்பட்டு, ரூ.2639.15 கோடியில் 100 கி.மீ தூரத்துக்கு கல்லணை கால்வாய் கான்கீர்ட் லைனிங் அமைக்கும் பணி, 1,339 மதகுகள் திரும்ப கட்டும் பணி, 21 கால்வாய் நீர்வழி பாலம் திரும்ப கட்டும் பணி, 12 கால்வாய் நீர் வழி பாலம் சீரமைக்கும் பணி, 24 நீரொழுங்கிகள் திரும்ப கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதியதாக கட்டும் பணி, 20 பாலங்கள் புதியதாகவும், 10 பாலங்கள் சீரமைக்கும் பணி, 308 ஏரிகள் புனரமைக்கும் பணி என நடைபெற உள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி எந்த தடையுமின்றி பெற முடியும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்ல இரு வார காலம் பிடிக்கும், இப்பணிகள் நிறைவு பெற்றதும், ஒரு வார காலத்தில் தண்ணீர் செல்லும். தண்ணீர் பூமிக்குள் இறங்கும் வகையில் ஆங்காங்கே கசிவு நீர் குழிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தடுப்பணை விவசாயிகள் கோரிக்கை:

கல்லணை கால்வாயில் சிமெண்ட் கொண்டு தளம் அமைக்கும் நிலையில், தண்ணீர் பூமியில் இறங்க வாய்ப்பில்லாமல் உள்ளது. மேலும், கல்லணை கால்வாயில், ஒருசில இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் கோடை காலத்தில் தண்ணீர் தேங்கி கால்நடைகளுக்கு பயன்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: