திருமலை: ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி பணத்தையும், ஒரு கிலோ தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆந்திரா- தெலங்கானா மாநில எல்லையான பஞ்சலிங்க சோதனைச்சாவடி அருகே கர்னூல் எஸ்பி பக்கீரப்பா உத்தரவின்படி, போலீசார் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த சேத்தன் குமார் என்பவர் வைத்திருந்த ஒரு பையில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் பணமும், ஒரு கிலோ தங்கம் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தன்னிடம் உள்ள பணம் சென்னையில் தனியார் மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது. தங்க நகைகள் ஐதராபாத் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி நகைக்கடைக்கு சொந்தமானது,’ என தெரிவித்தார்.