மத்திய பாஜ அரசு விவசாயிகளை பாழ்படுத்தும் வகையில் உர விலை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விவசாயிகளை பாழ்படுத்தும் வகையில் மத்திய பாஜ அரசு உர விலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயில் இருந்து 1900 ரூபாயாக செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அராஜகமாக கலைத்திருப்பதற்கும் திமுக சார்பில் மத்திய பாஜ அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு கூட மனமில்லாத, மார்க்கம் தெரியாத, மனிதாபிமானமற்ற மத்திய பாஜ அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வை தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து, இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக, தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல.

உர விலையை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதன் பிறகு உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜ அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தை செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு. ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்து விட்டு பிறகு திரும்பப் பெற்றது மத்திய அரசு. இப்போது உர விலையை உயர்த்தி விட்டு இப்போது அமல்படுத்தமாட்டோம் என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் இந்த பாஜ அரசுக்கு இருக்கிற நிறுவனங்களை கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. ஒருபுறம் உரவிலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொரு புறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்து, தமிழகத்திற்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தீர்ப்பாயம் கலைப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தீவிர முயற்சியின் விளைவாக 2003ல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது. இங்கு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த தீர்ப்பாயம் காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கிய பங்காற்றியது. ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்த தீர்ப்பாயத்தை கலைத்துள்ளது மத்திய பாஜ அரசு. இந்த தீர்ப்பாயம் மட்டுமல்ல, இன்னும் பிற 7 தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. உயர் நீதிமன்றங்களின் சுமையை குறைக்க, மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜ அரசு கலைத்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்தது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: