உரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தென்சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 425 பேர், 2 ஆயிரம் லாரிகள் மூலம், சென்னை மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்கள்.

சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் போது, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாக கூறி அதிகாரிகள், தங்கள் உறுப்பினர்களை துன்புறுத்துகிறார்கள். எனவே, தண்ணீர் எடுத்துச் செல்லும் தங்கள் சங்க உறுப்பினர்களின் தண்ணீர் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. மனுதாரர் சங்க உறுப்பினர்கள் அதுபோல ஒப்புதல்களை பெற்றுள்ளனரா என்பதை தெரிவிக்கவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் உரிய ஒப்புதல்களை பெற்றுள்ளனர் என்று முடிவுக்கு வர எந்த அடிப்படையும் இல்லாததால், தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேசமயம், உரிய ஒப்புதல்களை பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: