வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய விவகாரம்: கேரளா சபாநாயகரிடம் சுங்க இலாகா விசாரணை: வீட்டுக்கே நேரடியாக சென்று அதிரடி

திருவனந்தபுரம்: வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை சம்மன் கொடுத்தும் ஆஜராகாததால், சுங்க இலாகா அதிகாரிகள் கேரள சபாநாயகர் வீட்டுக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்திய சொப்னா கும்பல், இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைப்புகளான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் சுங்க இலாகா நடத்திய விசாரணையில், கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்காகவும், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது ெதரிய வந்தது. இதுபோல், துபாயில் கல்லூரி தொடங்கவும் சபாநாயகர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து. சபாநாயகரின் உதவியாளரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது. இந்நிலையில், டாலர் கடத்தல் பற்றி விசாரிப்பதற்காக சபாநாயகர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா நோட்டீஸ் வழங்கியது.

ஆனால், தேர்தல் வேலைகள் உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது என அவர் கூறி தவிர்த்து வந்தார். இதனால், சுங்க இலாகா மீண்டும் ேநாட்டீஸ் வழங்கியது. ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, நேரில் ஆஜராக முடியாது என சபாநாயகர் ராமகிருஷ்ணன் சுங்க இலாகாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் நேற்றுதான் வெளியானது. இது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: