இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை யானைகவுனி கல்யாணநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது சித்தியுடன் வசித்து வருகிறார். வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனுசாமி (36) என்பவருக்கும், இளம்பெண்ணின் சித்திக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் முனுசாமி, அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டு அந்த வீட்டிற்கு சென்ற முனுசாமி, இளம்பெண்ணின் சித்திக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும், இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதில், இளம்பெண் கர்ப்பமானார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தவறாக பேசியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி செய்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் முனுசாமி மீது பூக்கடை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘முனுசாமி மீதான பலாத்கார குற்றச்சாட்டுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டார்.

அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா, பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தையுடன் எந்தவித ஆதரவும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். எனவே, அவருக்கு நிர்பயா நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: