×

தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் சீல் வைப்பு: துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவத்தினர் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்புடன் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அறையை 24 மணி நேரமும் சிசிடிவியில் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்குப்பதிவு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. பின்னர், பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சீல் வைக்கப்பட்டு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் வைத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

 சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரிகல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அந்த மையங்களில் இரும்பு கம்பிகளால் நெருப்பினால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாப்பு அறைக்கு சீலிடப்பட்டது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்கள் முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் வரை பொருத்தப்பட்டுள்ளது.

இதற்காக தனி கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும். வாக்கு எண்ணும் மையங்களில் வேறு நபர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதும் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் பணியில் ஈடுபடுவார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

˜ சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ˜ மையங்களில் இரும்பு கம்பிகளால் நெருப்பினால் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. ˜ ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கலாம்.

Tags : Tamil Nadu , Sealing of 75 counting centers across Tamil Nadu: 3 tier security with paramilitaries
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...