×

கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க!

நன்றி குங்குமம் தோழி

சம்மரை சமாளிங்க...


இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி? கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளில் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்ற கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் ஹேமலதா விடையளித்தார்.

முதலாவதாக கோடை நேரத்தில் வெளியில் அதிகம் சுற்றாமல் இருப்பதே சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அப்படியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கைகளில் எப்போதும் தண்ணீர் பாட்டிலோடு செல்லுங்கள். ஏனென்றால் கோடைகாலத்தில் நம் உடலில் இருக்கும் நீர்சத்து குறையும், தண்ணீர் பாட்டில் கைகளில் இருந்தால் அவ்வப்போது குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.
சருமத்திற்கு…

*நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு கோடை நேரத்தில் வியர்க்குரு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். கடைகளில் விற்கப்படும் சந்தன பவுடர் கலப்படம் நிறைந்ததாக இருக்கும். எனவே அதனை தவிர்த்து, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சந்தனக் கட்டையினை வாங்கி அரைத்து குழந்தைகளின் சருமத்தில் தடவினால் வியர்க்குருவிற்கு நிவாரணம் கிடைக்கும்.

*வேப்பிலை உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியைத் தருவது. கிருமி நாசினிகளை எதிர்க்கும் ஆன்டிபயாட்டிக் தன்மை நிறைந்தது. குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்பு கொஞ்சம் வேப்பை இலைகளைப் பறித்து தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரில் குளிக்க வைக்கவும்.

*6 முதல் 7 மாதக் குழந்தையாக இருந்தால் தர்பூசணி சாற்றில் காட்டன் துணியை நனைத்து அதைக்கொண்டு குழந்தையைத் துடைக்கலாம். இதுவும் வியர்க்குருவிற்கு நிவாரணம் தரக் கூடியது.

*நுங்குவின் தோலை எடுத்து வியர்க்குருவில் தடவினாலும் உடனடி தீர்வு கிடைக்கும். இளநீரில் இருக்கும் வழுக்கையும் கோடைகாலத்தில் வரும்
சருமப் பிரச்சனையான வியர்க்குரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் தருவது.

*தேங்காய் எண்ணையும் சருமத்திற்கு நன்மை தரக்கூடியது. இதையும் வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவலாம். செக்கில் ஆட்டி எடுத்த தரம் நிறைந்த  அசல் தேங்காய் எண்ணையாக வாங்கி பயன்படுத்தினால் நல்லது.

*புளிக்காத தயிர், பால் இவற்றை சருமத்தில் தடவினாலும் வியர்க்குரு நீங்கும். அதேபோல் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை நன்றாக சூடு நீங்கி குளிர்ந்த பிறகு ஒரு துணி அல்லது பஞ்சில் நனைத்து குழந்தைகளின் சருமத்தில் இருக்கும் வியர்க்குருவில் தடவினால் நீங்கும்.

*குளித்து முடித்ததும், தேங்காய்ப் பால், சோற்றுக் கற்றாழை போன்றவற்றை கலந்து தலை முதல் பாதம் வரை வாரத்தில் ஒருநாள் தடவினால் தோலில் ஏற்படும் கருமை, சரும மாற்றம் போன்றவை  சரியாகும். சோற்றுக் கற்றாழையின் கொலகொலப்புத் தன்மையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே பயன்படுத்துதல் வேண்டும்.

*தேங்காய் எண்ைண, நல்லெண்ணை, சந்தன எண்ணை போன்றவை உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சி தரக் கூடியது. இதில் எதாவது ஒன்றை சருமத்தில் தேய்த்து குளிக்கலாம். இல்லையெனில், சந்தன எண்ணையினை தண்ணீரில் இரண்டு துளிகள் சேர்த்து அந்த நீரில் குளிக்கலாம்.

*குளித்துவிட்டு வந்த பிறகு, தேங்காய் எண்ணையை சருமத்தில் தடவி தேய்க்கவும். இது தோலை சூரிய ஒளியின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். உடல் சூட்டை ஏற்படுத்தும் சிலவகை அரோமா ஆயில்களை கண்டறிந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

*கோடை காலத்தில் விளம்பரத்தில் வரும், வியர்க்குரு பவுடர், ஸ்கின் லோஷன் இவற்றைப் பயன்படுத்துவது தேவையற்றது. நமக்கு அருகாமையில் எளிதில் கிடைக்கும் பொருட்களே எப்போதும் சிறந்தது.

உணவு முறை…

*விடுமுறையில் இருக்கும் நம் குட்டீஸ்கள், விளம்பரங்களில் வரும் கலர் கலரான ஐஸ்க்ரீம்கள், விதவிதமாக பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு வரும் குளிர் பானங்களை அதிகம் விரும்பிக் கேட்பார்கள். முடிந்தவரை ஐஸ், ஐஸ்க்ரீம், பாட்டில் பானங்களை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை தவிர்த்துவிடுங்கள்.

*கோடையை காலத்தில் விற்பனைக்கு வரும் நீர்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம் பழம் மற்றும் வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிடலாம். இத்துடன் பேரிக்காய், ஆப்பிள், மாதுளை போன்ற நீர் சத்தான பழங்களையும், பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறுகளையும் (fresh juice) அருந்துவதே உடலுக்கு நல்லது.

ப்ளூபெர்ரி (blueberry) சருமத்திற்கு மிகவும் நல்லது. இது கோடை தாக்கத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்யும் தன்மை கொண்டது. ப்ளூபெர்ரி கிடைக்காத நிலையில் ட்ரை கிரேப்ஸ் எனப்படும் உலர் திராட்சைகளைச் சாப்பிடலாம். புளிப்புத் தன்மை ஏறாத மோர் குடிப்பதும் கோடைக்கு நல்லது. அதேபோல், புளிப்புத் தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை கோடை காலத்தில் தவிர்ப்பதும் நல்லது.

*கோடை நேரத்தில் அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. எனவே உண்ணும் உணவை சரியான நேரத்திற்கு உண்ணவும். புளிப்பையும், காரத்தையும் சாப்பிடுவதை கோடை காலத்தில் சுத்தமாகத் தவிர்த்தலும் வேண்டும். சூட்டை அதிகரிக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மசாலாப் பொருட்கள், காரம் நிறைந்த சீஸ், சாலட் வகை உணவுகளையும் தவிர்க்கவும். முடிந்த வரை சூடான உணவுகள், சூடாக காஃபி, டீ போன்ற பானங்களையும் தவிர்க்கவும். பெரும்பாலும் கோடை காலத்தில் கூழ் வகை உணவுகளாகச் சாப்பிட்டு உடலை கூல் பண்ணுங்க.

*இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு வெந்தயத்தை ஊறவைத்து, வெந்தயம் ஊறிய தண்ணீரை அதிகாலையில் குடிப்பதோடு ஊறிய வெந்தயத்தை உண்ண வேண்டும். இதில் உடல் எத்தனை சூடாக இருந்தாலும், அரைமணி நேரத்தில் குளிர்ச்சி அடையும். இது ஆண்களுக்கு ரொம்பவே நல்லது. சூடான உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் நல்லது.

*கூடுமானவரை மண்பானையில் ஊற்றிய தண்ணீரை அருந்தவும். இயற்கையாக செய்த மண்பானையை வாங்கி அடியில் மணல் கொட்டி அதில் தண்ணீர் நிறைத்து குளிர்ந்ததும் பருகவும். மண்பானைக்குள் வெட்டி வேர், நன்னாரி வேர், வால் மிளகு, அதிமதுரம், கருங்காலி பட்டை விதை, சித்தரத்தை போன்றவற்றை போட்டும் குடிக்கலாம்.

இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். துளசி, புதினா போன்ற மூலிகை இலைகளை மண்பானைத் தண்ணீரில் போட்டும் குடிக்கலாம். குழாய்கள் பொருத்தப்பட்ட, வண்ணம் பூசிய மண் பானைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

*கருங்காலி பட்டை விதையை பவுடராக்கி காட்டன் துணியில் கட்டி குளிர் காலமாக இருந்தால் சுடுநீரில் போட்டும், வெயில் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரில் மண்பானையில் போட்டும் பயன்படுத்தலாம். கருங்காலிபட்டை விதை கலந்த நீரின் நிறம் செம்பு நிறத்தில் சுவை நிறைந்ததாக இருப்பதோடு, காலநிலைக்கு ஏற்ப உடலை சமநிலைப்படுத்தும்.

*பருத்தி நூலில் தயாரிக்கப்பட்ட தளர்வான காட்டன் உடைகளை பயன்படுத்துங்கள். கூடுமானவரை இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையே எப்போதும் நல்லது. நம் முதியோர்கள் நமக்காக சொல்லி சென்ற விசயங்கள் எல்லாவற்றிலும் மருத்துவத்தின் மகத்துவம் நிறைந்து கிடக்கிறது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினாலே கோடையை சமாளிக்கலாம்.

*வெயிலின் உக்கிரம் நிறைந்த இந்த கோடை நேரத்தில் வீட்டிற்கு வெளியே மண் பானைகளை தண்ணீரால் நிரப்பி வையுங்கள். நம் வீட்டைக் கடந்து செல்லும் யாரோ ஒரு வழிப் போக்கரின் தாகத்தை தீர்க்க அது கண்டிப்பாக உதவும். மேலும் வீட்டின் மொட்டைமாடி அல்லது பால்கனிகளில் சின்ன பாத்திரங்களில் தண்ணீரை வைத்து பறவைகளின் தாகத்தை தீர்க்க உதவுங்கள். கோடையை முடிந்தவரை பாதுகாப்பாக சமாளியுங்கள்’’ என முடித்தார்.

மகேஸ்வரி நாகராஜன்

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்