சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விநாயகர், முருகன் தெய்வ ஜாதகம் வைத்து வழிபாடு

காங்கயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் விநாயகர் முருகன் தெய்வ ஜாதகம், திருமாங்கல்யம், ரூ.32 மதிப்பில் நாணயங்கள் வைத்து பக்கதர்கள் வழிபட்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா? என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர்.  

வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம்,  அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூ மாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜையானது.

இந்நிலையில் காங்கயம் அடுத்துள்ள முத்தூர், வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜா (35) என்பவரின் கனவில் அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சியில் விநாயகர் முருகன் தெய்வ ஜாதகம் திருமாங்கல்யம் ரூ.32 மதிப்பில் நாணயங்கள் வைத்து பூஜை செய்ய உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சியில் விநாயகர் முருகன் தெய்வ ஜாதகம், திருமாங்கல்யம், ரூ.32 மதிப்பில் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சியில் விநாயகர் முருகன் தெய்வ ஜாதகம் திருமாங்கல்யம் ரூ.32 மதிப்பில் நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் போக போகத்தான் தெரியவரும் என சிவாச்சியர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு, இதே கோகுல்ராஜா கனவில் நாணய குவியலுடன் ஐம்பொன்வேல் உத்தரவானது. 2020ம் ஆண்டு நிறைநாழி உடன் விரலி மஞ்சள் ரூபாய் நாணயம் மற்றும் நூல் உடன் கூடிய கருதூசி உத்தரவானது. நேற்று 3வது முறையாக அம்மை அப்பர் திருக்கல்யாண கைலாய காட்சியில் விநாயகர் முருகன் தெய்வ ஜாதகம் திருமாங்கல்யம் ரூ.32 மதிப்பில் நாணயங்கள் உத்தரவானது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: