அவன் குலைத்தது என் முகத்தைதான்,என் நம்பிக்கையை அல்ல!

நன்றி குங்குமம் தோழி

பாலிவுட்டில் தனது தனித்துவமிக்க நடிப்பாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர், தீபிகா படுகோன். ரன்வீர் சிங்குடன் திருமணமாகி சில மாத காலம் ஓய்விலிருந்தவர், இப்போது மீண்டும் நடிக்க திரும்பியுள்ளார். தன் இரண்டாவது இன்னிங்சை “சப்பாக்” படத்தின் மூலம் வெயிட்டாக ஆரம்பித்துள்ளார்.

சப்பாக், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை கூறும் படம். இதில் தீபிகா படுகோன், லஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டெல்லியை சேர்ந்த ஏழை குடும்பத்தில் பிறந்தவர், லஷ்மி அகர்வால். 2005ல், 15 வயதே நிரம்பியிருந்த லஷ்மிக்கு, 30 வயதை தாண்டிய நபரிடமிருந்து மொபைலில் காதல் மெசேஜ் வரத்தொடங்கியது. பயந்து போன லஷ்மி, அந்த மெசேஜ்களை தவிர்த்து வந்துள்ளார். ஒரு நாள் கூட்டம் நிரம்பியிருந்த மார்க்கெட்டில் இருந்த லஷ்மியின் முன், அதே 30 வயது ஆசாமி வந்து நின்றான்.

பயத்தில் உறைந்திருந்த லஷ்மியின் மீது, மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து, அவளின் முகம், கழுத்து பகுதிகளில் கொட்டினான். உதவிக்கு கதறிய லஷ்மியை யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகம், கழுத்து, தோள்பட்டை, கை எனப் பல இடங்கள் கருகி போயிருந்தன.

லஷ்மியை சுற்றியிருந்த கண்ணாடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அவள் எவ்வளவு கேட்டும், தன் உருவத்தை பார்க்க அவள் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய லஷ்மியின் கையில் எப்படியோ ஒரு கண்ணாடி கிடைக்க, தன் நிலையை பார்த்து உருக்குலைந்து போனாள். அப்போது, பெற்றோர்களின் அன்பும், பக்கபலமும்தான், அவளை துயரத்திலிருந்து மீட்டெடுத்தது.

தன்னை போலவே காதலிக்க மறுத்த காரணத்தால் ஆசிட் வீசப்பட்டோ, கணவனால் சித்திரவதை செய்யப்பட்டு ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பல பெண்கள் நம் நாட்டிலிருப்பதை உணர்ந்து, அந்த பெண்களின் குரலாய் மாறினார். இதுவரை, ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு வேலை வாங்கித் தருவது முதல் அவர்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்க போராடி வென்றுள்ளார். ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடுகளும் கொண்டுவந்து, ஆசிட் வீச்சுக்கு எதிரான நம்பிக்கையாக மாறினார்.

இவரின் தைரியத்தை பாராட்டி, ‘‘International Women of Courage” என்ற விருதினை, வாஷிங்டன் நகரில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்செல் ஒபாமாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். அப்போது, ‘‘அவன் குலைத்தது என் முகத்தைதான், என் நம்பிக்கையை அல்ல.

அவன் ஆசிட் வீசியது என் முகத்தில்தான், என் கனவுகளில் அல்ல” என்று கூறினார் இவரின் இந்த போராட்டங்களுக்கு துணையாய் நின்ற, அலோக் தீக்‌ஷித் என்ற சமூக ஆர்வலரை காதலித்து திருமணம் செய்து ெகாண்டார். அவர்களுக்கு பிஹு என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.இந்த சாதனை பெண்ணாக நடிப்பதில் பெருமை கொள்வதாகவும், இந்தப் படம் 2020, ஜனவரி 10ல் வெளியாகும் எனவும் தீபிகா, தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஸ்வேதா கண்ணன்

Related Stories: