பெண்களும் பவுன்சர்களாகலாம்!

நன்றி குங்குமம் தோழி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அன்று விநாயகர் சதுர்த்தி விழா. கட்டுக்கடங்காக கூட்டம். இவர்களின் ஒரு கண் அசைவுக்கு அந்த கூட்டம் கட்டுப்பட்டு நின்றது. அவர்கள் போலீஸ்காரர்களோ ராணுவ அதிகாரிகளோ இல்லை. கருப்பு சட்டை பேன்ட் அணிந்த பெண் பாதுகாவலர்கள். கைகளில் லத்தி இல்லாமல் தங்களின் மிடுக்கான தோற்றத்தில் அந்த மொத்த கூட்டத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அன்றைக்கு அவர்களுக்கு நியமிக்கப்பட்ட டாஸ்க் அது தான். அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய திருப்தி நடிகை தீபா பராப்பின் முகத்தில் தெரிந்தது. இவர் தான் பெண் பாதுகாவலர்களின் தலைமை பாதுகாவலர்.

புனேயில் ‘ரன்ராகினி அகாடமி’ என்ற பயிற்சி மையத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் நடிகை தீபா. இவர் சமூக ஆர்வலரும் கூட. இதில் இப்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாடிகார்டுகளாக பயிற்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் முதல் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என பல தரப்பு பெண்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

பெண் அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களாக, பொதுக்கூட்டங்களில் அத்துமீறுபவர்களை ஒடுக்குபவர்களாக, பப்களில் குடித்து விட்டு பெண்களிடம் அத்துமீறும் ஆண்களின் எதிரிகளாக இந்த பெண்கள் பல்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கின்றனர். இந்த பயிற்சிக்காக பெண்களிடம் தீபா  ஒரு பைசா கூட வசூலிப்பதில்லை. ஆனால் பயிற்சி பெற்று வேலையில் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு பெண்களும் ரூ.700 வீதம் தினமும் சம்பாதிக்கின்றனர்.இது தொடர்பாக தீபாவை கேட்டபோது, ‘‘மகாராஷ்டிரா காவல்துறையில் போலீசாக பணியாற்ற விரும்பினேன். நான் தேர்வு செய்யப்படாததால் மும்பையில் தங்கி சினிமாவில் நடிக்க தொடங்கினேன்.  

அப்போது சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பாடிகார்டுகளாக ஆண்கள் சிலர் வருவதை பார்த்தேன். பின்னர் புனே திரும்பிய நான் இந்த அகாடமியை தொடங்கி பெண்களுக்கு பாடிகார்டுகளாக பயிற்சி அளிக்க ஆரம்பிச்சேன். இதற்காக நான் கட்டணம் வாங்குவதில்லை. மாறாக இங்கு பயிற்சி பெறும் பெண்கள் 5 அடி உயரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கிறேன். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தருகிறேன். வேலை கிடைத்த பெண்களிடம் மட்டும் ரூ. 100 மட்டும் பெற்றுக்கொள்கிறேன்’’ என்றார்.

பயிற்சி பெற்று பாடிகார்டாக பணியாற்றும் அதிதி, ‘‘என் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடிப்பார். அதில் இருந்து விடுபடவும் எனது குழந்தைகளை காப்பாற்றவும் ரன்ராகினி அகாடமியில் சேர்ந்தேன். இப்போது தலைநிமிர்ந்து வாழ்கிறேன். சொல்லப்போனால் என் கணவர் என்னை பார்த்து மிரளுகிறார். சினிமா நடிகைகள், அரசியல் கூட்டங்களில் பாதுகாவலர்களாக வேலைப் பார்க்கிறேன். தினமும் ரூ.1000 சம்பாதிக்கிறேன்’’ என்றார்.தீபாவால் புனேயில் பெண்களுக்கு வாழ்க்கை கிடைத்துள்ளதுடன் தலைநிமிர்ந்து நடக்கவும் முடிகிறது.

கோமதி பாஸ்கரன்

Related Stories: