×

திமுக தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.. பெட்ரோல் 5, டீசல் 4, பால் 3 விலை குறைப்பு

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், பெட்ரோல் ரூ.5, டீசல் 4, ஆவின் பால் ரூ.3 விலை குறைக்கப்படும். ரேஷன் அட்டைக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். கல்வி, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு உள்ளூர் பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம். பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் உள்பட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. தொடர்ந்து, போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.

இதில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.இந்நிலையில், தேர்தல் கதாநாயகனாக விளங்கும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். அப்போது, பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். மேலும், தேர்தல் அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்ட டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவை சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர்  செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர்  அ.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழகத்திற்கு என்று தேர்தல் அறிக்கையும், மாவட்டத்திற்கு என்று ஒரு தேர்தல் அறிக்கையும் திமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வெளியிட்டேன்.  இதன் தொடர்ச்சியாக திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பொதுவாக திமுகவின் தேர்தல் அறிக்கையை ‘தேர்தல் கதாநாயகன்’ என்று சொல்வார்கள். நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள். இரண்டாவது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.திமுக தோன்றிய காலத்தில் இருந்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. 1952ம் ஆண்டு தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. என்றாலும், தேர்தல் அறிக்கையை பேரறிஞர் அண்ணா வெளியிட்டார். ‘இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் குரல் கொடுப்போம் என்று வாக்குறுதி தருபவர்களுக்கு திமுகவின் ஆதரவு உண்டு’ என பேரறிஞர் அண்ணா அறிவித்தார்.

1957ம் ஆண்டு முதல், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும்-நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், அதற்கென தனியாக தேர்தல் அறிக்கைகளை திமுக வெளியிடும். தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல் - தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகவே அமையும்.திமுக பங்கெடுத்த முதல் தேர்தலின்போது, நாவலர் தலைமையிலான ஒரு குழு, நாடு முழுவதும் சுற்றி தமிழக மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதேபோல், இப்போதும் திமுக பொருளாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், தமிழகம் முழுவதும் சென்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்கள். இக்குழுவில் இடம்பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகிய அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் வரலாற்றுக் கடமையை நீங்கள் செய்துள்ளீர்கள். பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இவை பேசப்படும்.தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வாக்குறுதிகளாக உள்ளன. இவற்றில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக வாசிக்கிறேன்.

* திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.
* கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
* முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
* அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40%
* தமிழகத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பெற்ற 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள் பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் பணிகளில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
* மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர்.

தமிழக நிறுவனங்களில் 75 சதவீதம் வேலை தமிழர்களுக்கு வழங்க சட்டம்
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2020-2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 வரை ஐம்பது லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த மாபெரும் திட்டத்தினைத் திறம்பட நிறைவேற்றிட மாநில திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க அமைப்பு எனப்படும் நிறுவனம் உருவாக்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும்.
* தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்.
* தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும்.
* குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓடீநுவூதியம் வழங்கப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

பண்பாட்டு திருநாளாக பொங்கல் விழா
* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
* பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.
* சென்னையில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
* கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்துவரி அதிகரிக்கப்படாது.
* கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ₹4 ஆயிரம் வழங்கப்படும்.
* ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம்
* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹100 மானியமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும்.
* மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
* நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
* கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா.
* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய, சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
* குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க ‘கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்’ கொண்டு வரப்படும்.
* நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

500 இடங்களில் கலைஞர் உணவகம்
* ஏழை மக்கள் பசி தீர, முதல்கட்டமாக 500 இடங்களில் ‘கலைஞர் உணவகம்’ அமைக்கப்படும்
* நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
* கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.
* இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
* கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
* பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, ₹3 லட்சம் என்பது ₹5 லட்சம் ஆக்கப்படும்.
* தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
* சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.

பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு
* அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
* சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி வரும்.
* புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.
* அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கைக்கணினி வழங்கப்படும்.
* கல்வி நிறுவனங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்.
* அரசுத் துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
* போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

சென்னையில் குழாய் மூலம் குடிநீர்
* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
* அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
* கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* முக்கியமான மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
* கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.

கோயில் புனரமைப்புக்கு 1000 கோடி ஒதுக்கீடு
* இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.

நெல் ஆதார விலை உயர்த்தப்படும்
* நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ₹2500ஆக உயர்த்தி வழங்கப்படும்,
* கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு   ₹4000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.
* நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்.
* முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தேர்ந்தேடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். ஏற்கனவே நடந்த உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, உள்ளாட்சி  தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு மு.க.ஸ்டாலின், ‘உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான்  எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். எந்த  காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். அதிமுகவாக இருந்தால் அதை  கலைப்பார்கள். நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம். திமுகவை  பொறுத்தவரையில் நிச்சயமாக அதை கலைக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டோம்.  மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்’’ என்றார்.

மகளிருக்கு பேறுகால உதவித்தொகை 24,000மாக உயர்வு
* மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
* புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
* தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்.

* 5 ஆண்டில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம்.
* வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

புதிய ஆட்டோ வாங்க டிரைவர்களுக்கு மானியம்
* ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட ₹10,000 மானியம் வழங்கப்படும்.
* பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
* பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
* சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

* ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
* இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
* வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
* சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு.
* தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம்.
* வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
* இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

2000 கோடியில் 200 தடுப்பணைகள்
*  2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
* ஏழை-எளிய, சிறு வணிகர்களுக்கு ₹15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர்செய்ய பொருளாதார உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
* மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
* அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
* தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
* பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
* மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம்.
* நரிக்குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
* பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
* சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் இலவசமாக வழங்கப்படும்.
* புகழ்பெற்ற இந்து கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும்.
* தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.

திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில் பெட்ரோல் 5, டீசல் 4, ஆவின் பால் 3 விலை குறைக்கப்படும். ரேஷன் அட்டைக்கு 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். கல்வி, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு உள்ளூர் பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம். பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் உள்பட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். மொத்தத்தில் 505 அறிவிப்புகளை அவர் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம்
*  திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* வேலூர், கரூர், ஓசூர் மற்றும் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
* 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம்
வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயரிடப்படும். தலைவர் கலைஞர் புகழ்பெற்ற வாசகம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அது, ”சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்” என்பதாகும். அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன் என்பதைத் தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன். திமுக ஆட்சி மலரும். மக்களின் கவலைகள் யாவும் தீரும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : Diplatha Elections ,Stalin , DMK Election Report MK Stalin
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...