×

மயிலாடுதுறை மாமரத்துமேடை பகுதியில் 4 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி

*இது உங்க ஏரியா

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாமரத்துமேடை பகுதியில் 4 மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை நகராட்சி பூக்கடைவீதி மாமரத்துமேடை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து 4 மாதமாக இதே நிலை நீடிக்கிறது. மயிலாடுதுறை- கும்பகோணம் சாலை சித்த மருத்துவமனை அருகே செல்லும் இந்த மாமரத்துமேடை சாலை வழியாக தான் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக நல்லமுத்தான் தெரு, தச்சுத்தெரு, தூக்கணாங்குளம் போன்ற தெருக்களுக்கு இந்த மாமரத்துமேடை வழியை தான் பயன்படுத்துகின்றனர்.

மாமரத்துமேடை பகுதியில் 100 அடி தூரத்துக்கு குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக நடந்து செல்லும் மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதி தொற்றுநோய் உற்பத்தி செய்யும் கூடமாக உருவாகி வருகிறது.

எனவே மயிலாடுதுறை நகராட்சி பூக்கடைவீதி மாமரத்துமேடை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paleidu , Mayiladuthurai: The public has suffered due to the stagnant sewage in the Mayiladuthurai Mamarathumedai area for 4 months.
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!