சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம்தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 5,911 வாக்குச் சாவடிகளும், 2,157 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்த 9,847 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 7,392 கட்டுப்பாட்டு கருவிகள், 7,474 விவி பேடு இயந்திரங்கள் அனைத்து கட்ட சோதனைகளும் செயயப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.