×

தமிழக மக்களுக்கு விடிவு வேண்டுமானால் அதிமுக அராஜக ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்: வெற்றிக்காக உழைக்க கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: தமிழக மக்களுக்கு விடிவு வேண்டுமானால் அதிமுகவின்  ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்றும், அதற்காக திமுக கூட்டணி வெற்றிக்காக அயராமல் உழைக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒப்பந்தம் மிகுந்த மகிழ்ச்சியுடன்  நிறைவேறியிருக்கிறது. இந்த கூட்டணி கொள்கையில் அடிப்படையிலானது. எண்ணிக்கையின் அடிப்படையிலானது அல்ல. மக்கள் நலன் சார்ந்து, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை  அகற்றுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டுமானால், பாஜவின் பிடியில் இருக்கிற அதிமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். திமுக சார்பில் திருச்சியில் நடந்த தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் உரையாற்றும் போது பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என்று சூளுரை மேற்கொண்டதை வரவேற்கிறேன்.

சமீபகாலமாக எந்த திசையில் செல்கிறோம் என்று ஆட்சியாளர்களுக்கே புரியாமல் ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்ததால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவார்கள். இந்நிலையில், 7 கோடி மக்களின்  இதயங்களை வெல்வதற்கு 7 தொலைநோக்கு திட்டங்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  தமிழகத்தை மீட்டெடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கிற காங்கிரஸ் கட்சி  தீவிரமான முனைப்புடன், தோழமை உணர்வுடன் செயல்படும். கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி, 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்ததை  நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டு விட்டது. குறிக்கோள் அறிவிக்கப்பட்டு விட்டது. நோக்கம் தெளிவாக இருக்கிறது. செயல் திட்டம் தயாராகி விட்டது.மத்திய பாஜ ஆட்சியின்  ஏஜென்ட்களாக செயல்பட்டு தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கிற ஊழலில் ஊறி திளைத்த அதிமுக ஆட்சியை அகற்றுவதே காங்கிரசின் ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள். அந்த நோக்கத்தை அடைவதற்கு  தமிழக காங்கிரசார் இன்று முதல் கண் துஞ்சாமல், அயராமல் கடமை உணர்வோடு மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்கும் மகத்தான லட்சிய பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள  கேட்டுக்கொள்கிறேன்.

Tags : AIADMK ,Tamil Nadu ,KS Alagiri , AIADMK anarchist corrupt regime must be overthrown if Tamil Nadu people want relief: KS Alagiri calls on to work for victory
× RELATED போதைப்பொருளை கட்டுப்படுத்த...