தமிழக சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: மத்திய அரசு முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:சட்டமன்றத்தில் ஆண்களுக்கு இணையாக  பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கோரி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் மனித அமைப்பை சேர்ந்த முத்துசெல்வி உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளார்.அவர் மனுவில், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி, அணைக்கட்டு மற்றும் கே.வி.புரம் உள்ளிட்ட தொகுதிகளில் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சம அளவில் உள்ளனர். ஆனால் சட்டமன்றத்தில் 234  உறுப்பினர்களில் 20 பெண்கள் மட்டுமே உள்ளனர். பல ஆண்டுகளாக அரசியல், நிர்வாகம்,  சட்டமன்றம் என அனைத்திலும் பாலின சமத்துவம் என்பதே இல்லை.  அதற்கான எந்த  தீர்வும் கிடைக்கவில்லை.எனவே, சட்டமன்றத்தில்  ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்ககோரி தமிழக அரசிற்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் இது சட்டம் இயற்றி அமல்படுத்த வேண்டிய விவகாரம் என்பதால்  மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: