சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவும், அதிமுகவும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் கடந்த 10 வருடமாக அங்கம் வகித்த முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ், கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆதரவு கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படையின் இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார். இதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுகவிற்கு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவை வழங்கியுள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை தமிமுன் அன்சாரி நேற்று வழங்கினார்.