இளம்பிள்ளை: சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த வேளாண்துறை பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் வேளாண் உதவி தொழில் நுட்ப மேலாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இவர், ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சில நாட்களுக்கு முன்பு விருப்பமனு தாக்கல் செய்தார். இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. இது சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராமனின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து திலகவதியை பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு பணியில் இருப்பவர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். இதன் அடிப்படையில் திலகவதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,’’ என்றனர்.